ஸ்டாலின் இதுவரை வாங்கிய மனுக்கள் எல்லாம் எங்கே போனது? – முதலமைச்சர் கேள்வி

சட்டப்பேரவை தேர்தலில் மக்களை திசை திருப்பி திமுக வெற்றி பெற முயல்வதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட வள்ளியூரில், பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர், ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம், அவதூறு பரப்பி பொய் பிரசாரம் செய்து வருவதாக குற்றம்சாட்டினார். அதிமுக அரசு 30 ஆண்டுகளாக மக்களுக்கு நன்மை செய்து வருவதாகவும், அவர் பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், ஸ்டாலின் மனுக்களை வாங்கி, மக்களை ஏமாற்றுவதாகவும், இதுவரை வாங்கிய மனுக்கள் எங்கே சென்றன எனவும், ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார்.

மேலும், மக்களை திசை திருப்பி, திமுக வெற்றி பெற முயல்வதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர், மக்களை நம்ப வைக்க, திமுக தலைவர் ஸ்டாலின் எதை வேண்டுமானாலும் பேசுவதா எனவும் காட்டமாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வள்ளியூரில் இருந்து, களக்காடு செல்லும் வழியில், திருக்குறுங்குடி பகுதியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ஏழை எளிய மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் அதிமுக அரசால் நிறைவேற்றப்பட்டதாகவும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, விரைவில் மும்முனை மின்சாரமும் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

Exit mobile version