ஆதரவற்ற மூதாட்டிக்கு வீடுகட்டிக் கொடுத்த வாட்ஸ்அப் நண்பர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் வாட்ஸ்அப் குழு மூலம் ஆதரவற்ற ஏழை மூதாட்டிக்கு வீடு அமைத்து கொடுத்த நண்பர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

சாயல்குடியில் உங்கள் நண்பன் என்ற வாட்ஸ்அப் குழு செயல்பட்டு வருகிறது. இவர்கள் வாட்ஸ்அப் குழு மூலம் ராமநாதபுரம் மட்டுமின்றி தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பல்வேறு சமூகப் பணிகளில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சதுரயுகவள்ளியை சேர்ந்த தங்கம் என்ற மூதாட்டியின் எந்த ஆதரவும் இன்றி, தமிழக அரசின் மாதாந்திர முதியோர் உதவித்தொகை மூலம் வாழ்ந்து வருவது இந்தக் குழுவினருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஐநூறு முதல் ஆயிரம் ரூபாய் வரை வசூலித்து அந்த மூதாட்டியின் வீட்டை சிமெண்ட் கூரையால் புதுப்பித்து கொடுத்துள்ளனர்.

மாதந்தோறும் குழு உறுப்பினர்களிடம் சந்தா வசூல் செய்யும் இந்தக் குழுவினர், இயலாதவர்களுக்கு இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வருவது பொதுமக்களின் பாராட்டுதல்களை பெற்று வருகிறது.

Exit mobile version