ஒகேனக்கல்லில் நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

ஒகேனக்கல் வரும் காவிரி நீரின் வரத்து வினாடிக்கு, 10 ஆயிரம் கன அடியில் இருந்து 11 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள, கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து, வினாடிக்கு 11 ஆயிரத்து 400 கன அடி உபரிநீர், தமிழகத்துக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக, ஒகேனக்கல் வரும் காவிரி நீரின் வரத்து வினாடிக்கு, 10 ஆயிரம் கனஅடியில் இருந்து 11 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில், 20 வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், நிபந்தனைகளுடன் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பரிசல்கள் இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 புள்ளி 22 அடியாக உள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியிலிருந்து 9 ஆயிரத்து 500 கன அடியாக குறைந்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு, 10ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு ,மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Exit mobile version