ஒருபக்கம் குழாய் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர் ; மறுபக்கம் தண்ணீர் தேடி மக்கள்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியிலிருந்து சாயல்குடி செல்லும் நெடுஞ்சாலையில், குடிநீர் குழாய்கள் உடைந்து ஆங்காங்கே சாலை மற்றும் வயல்வெளிகளில் குடிநீர் பாய்ந்து வீணாகி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடலாடி அருகே உள்ள ஒருவானேந்தல் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்திலிருந்து ஒருபகுதி கிராமங்களுக்கும், மற்றொரு நீரேற்று மையமான கடுகுசந்தை மையத்திலிருந்து மற்ற பகுதி கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது, பிரதான குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, கடலாடியிலிருந்து சாயல்குடி செல்லும் நெடுஞ்சாலையில் ஆங்காங்கே பல இடங்களில் குடிநீர் வீணாகி வருகிறது.

இதனால், சாயல்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான, மாரியூர், முந்தல், வாலிநோக்கம் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இது குறித்து ஆட்சியரிடம் பல முறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை என குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள், அலட்சியத்துடன் செயல்பட்டு வரும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட பராமரிப்பு ஒப்பந்ததாரர் மற்றும் திட்ட பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

Exit mobile version