பிறந்து 10 நாட்களே ஆன பெண் சிசு கொலை செய்யப்பட்டதா?

நாமக்கல் அருகே பிறந்து 10 நாட்களே ஆன பெண் சிசு கொலை செய்யப்பட்டதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியை சேர்ந்த சூர்யா – கஸ்தூரி தம்பதிக்கு ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் உள்ளன. கஸ்தூரி மீண்டும் கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த 2ஆம் தேதி பிரசவத்திற்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மூன்றாவதாக அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. மூன்றாவது குழந்தை என்பதால் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியும், கஸ்தூரி மறுத்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

பொட்டிரெட்டிபட்டியில் உள்ள தாய் வீட்டில் கஸ்தூரி தங்கியிருந்த நிலையில், நேற்று திடீரென பெண் குழந்தை இறந்து விட்டதாக கூறி, சுடுகாட்டில் புதைத்துள்ளனர்.

சிசுவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மருத்துவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.  இதனையடுத்து குழந்தையின் உடலை தோண்டி எடுத்து, காவல்துறையினர் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் பெண் சிசு கொலை செய்யப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Exit mobile version