தேர்தல் விதிமுறை மீறல் புகார்: 3 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அறிக்கை அளிக்க உத்தரவு

விதிமுறை மீறல் புகாரையடுத்து, கடலூர், தர்மபுரி, திருவள்ளூர் தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளிடம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு விளக்கம் கேட்டுள்ளார்.

தர்மபுரியில் 8 வாக்குச்சாவடிகளிலும், கடலூர், திருவள்ளூரில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும் தேர்தல் நடத்தை விதிமுறை மீறப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அங்கு மீண்டும் வாக்குப்பதிவு நடத்தப்படலாம் என்று தகவல் வெளியானது. இந்நிலையில், கடலூர், தர்மபுரி, திருவள்ளூர் தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளிடம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு விளக்கம் கேட்டுள்ளார். அவர்களின் அறிக்கையை பெற்று, அதை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி, அதன் பின்னரே மறு வாக்குப்பதிவு குறித்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதனிடையே, பொன்பரப்பியில் கலவரம் நடந்ததால், அங்கும் மறு வாக்குப்பதிவு நடத்த கோரிக்கை எழுந்தது. ஆனால், ஊருக்குள் நடந்த கலவரத்தால், வாக்குப்பதிவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறியுள்ள சத்யபிரதா சாஹு, அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version