தடையை மீறி திமுகவினர் நடத்திய கூட்டம் – 600 பேர் மீது வழக்கு

சென்னையில் தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 600 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அரசின் வழிமுறைகளை பின்பற்றாமல், கிராமசபை கூட்டம் என்ற பெயரில், திமுக அரசியல் ஆதாயம் தேடும் வகையில் கூட்டத்தை நடத்தி வருகிறது. இதனால் நோய் பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்று கூட்டங்களை நடத்தக்கூடாது என்று போலீஸார் தடை விதித்திருந்தபோதும், சென்னையில் ஆவடி, ஐ.சி.எஃப், நசரத்பேட்டை, ஏழுகிணறு உள்ளிட்ட 6 இடங்களில் திமுகவினர் சட்டவிரோதமாக கிராம சபை கூட்டத்தை கூட்டினர். தடையை மீறி கூட்டம் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 600 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Exit mobile version