விக்கிரவாண்டி,நாங்குநேரி இடைத்தேர்தல்: அதிமுக சார்பில் இதுவரை 27 பேர் விருப்ப மனு தாக்கல்

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிமுக சார்பில் 27 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் இன்றும் நாளையும் விருப்ப மனுக்களை பெற்றுச் செல்லலாம் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது. இந்நிலையில் முதல்நாளான இன்று 27 பேர் விருப்ப மனுக்களை பெற்று, தாக்கல் செய்தனர். நாங்குநேரி தொகுதியில் போட்டியிட பி.எச்.மனோஜ் பாண்டியன், பிரபாகரன் உள்ளிட்ட 18 பேரும், விக்ரவாண்டி தொகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லட்சுமணன், ஒன்றிய கழக செயலாளர் வேலு உள்ளிட்ட 9 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். நாளை பிற்பகல் 3 மணி வரை விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படுகின்றன. நாளை மாலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்று வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்.

இதேபோல் புதுச்சேரியில் காலியாக உள்ள காமராஜ் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விருப்ப மனுக்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. விண்ணப்பக் கட்டணத் தொகையான 10 ஆயிரம் ரூபாயைச் செலுத்தி விண்ணப்ப படிவங்களைப் பெற்று, அன்றைய தினமே பூர்த்தி செய்து பிற்பகல் 3 மணிக்குள் தலைமைக்கழகத்தில் வழங்க வேண்டும் என்றும், பிற்பகல் 3.30 மணிக்கு நேர்காணல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version