விக்கிரவாண்டி, நாங்குநேரி வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக, 139 இடங்களில் 275 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் காவல்துறையினரும், 3 கம்பெனி துணை ராணுவப் படையினரும் ஈடுபடவுள்ளனர். தேர்தலை ஒட்டி தொகுதி முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று வாக்குபதிவு நடைபெறவுள்ள நிலையில், மக்கள் அச்சமில்லாமல் வாக்களிக்க துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்காக துணை ராணுவப் படையினர் கையில் துப்பாக்கியுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.

இதே போன்று, இடைத்தேர்தல் நடைபெற உள்ள மற்றொரு தொகுதியான நாங்குநேரியில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 389 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 748 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 3பேர் உள்ளிட்ட 2 லட்சத்து 57 ஆயிரத்து 418 வாக்காளர்கள் உள்ளனர். இடைதேர்தலுக்கான வாக்குப்பதிவிற்காக, நாங்குநேரியில் மொத்தம் 299 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 2 ஆயிரத்து 500 போலீசார் ஈடுபட உள்ளனர். இதில் 156 மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version