சீமான், ஹரிநாடார் மீது காவல்நிலையத்தில் விஜயலட்சுமி புகார்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமியை கொலை செய்ய பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக விஜயலட்சுமியின் அக்கா உஷா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். சீமானின் தூண்டுதலால் சாதா நாடார் மற்றும் ஹரிநாடார் போன்றவர்கள் சமூக வலைதளங்களில் தம்மை பற்றி இழிவாக பேசி வந்ததாக விஜயலட்சுமி நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும், வீடியோ வெளியிட்ட கையோடு ரத்த அழுத்த மாத்திரைகளை அதிகளவு உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனையடுத்து நடிகை விஜயலட்சுமி அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சீமானும், அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து தங்களை தொலைபேசி வாயிலாக தவறான வார்த்தைகளால் மிரட்டி வந்ததால் தான், விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றதாக சீமான் மீது குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார் நடிகை விஜயலட்சுமியின் அக்கா உஷா. இது குறித்து பேசிய நடிகை காயத்ரி ரகுராம் மனிதாபிமான அடிப்படையிலேயே விஜயலட்சுமிக்கு உதவியதாகவும், காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார். அடையாறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயலட்சுமியிடம் மாஜிஸ்திரேட் ஒருவர் வாக்குமூலம் பெற்ற நிலையில் அடையாறு காவல்நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் சீமான், ஹரிநாடார் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

Exit mobile version