தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான புள்ளிவிவரம் ஒன்றை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அப்புள்ளி விவரத்தின்படி 19.03.2020 ஆம் தேதியான இன்றுவரை, தமிழ்நாட்டில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை 1,94,236. அதில் தொடர் கண்காணிப்பில் உள்ளவர்கள் 3481 பேர். தமிழகத்தில் கொரோனா அறிகுறியுடன் இருப்பவர்களில், சோதனைக்கு தரப்பட்டுள்ள மாதிரிகளின் எண்ணிக்கை 320. அதில், 232 மாதிரிகள் கொரோனா நோய்தொற்று இல்லை(நெகட்டிவ்) என்று உறுதி செய்யப்பட்டவை. 2 மாதிரிகள் மட்டும் நோய் தொற்று இருப்பது(பாசிட்டிவ்) உறுதி செய்யப்பட்டது, அதிலும் ஒருவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். பாதிக்கப்பட்ட மற்றொரு நபர் டெல்லியை சேர்ந்தவர், அவர் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். மேலும், 86 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றது(under process). இவ்வாறு, அப்புள்ளி விவரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.