அமெரிக்கா-சீனா வர்த்தக போர் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுகளாக வர்த்தக போர் நடந்து வந்தது. இந்த நிலையில் தற்போது முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாக குற்றம்சாட்டி, சீனா மீது வர்த்தக போரை தொடங்கினார். இதனால் அமெரிக்காவில் உள்ள சீன பொருட்களுக்கு கூடுதல் வரிகள் விதிக்கபட்டன. இதற்கு பதிலடி தரும் வகையில், சீனாவில் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இவ்வாறு, இரு நாடுகளும் மாறி மாறி வரிகளை விதித்து வந்தன. இது உலகளாவிய பொருளாதார மந்த நிலைக்கு ஒரு காரணமாக கூறபட்டது.

இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இதையொட்டி இரு தரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில் முதல் கட்ட ஒப்பந்தம் இரு நாடுகள் இடையே தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் சீன பொருட்கள் மீதான 15 சதவீத அமெரிக்க வரி விதிப்பு ரத்தாகி உள்ளது. இரண்டாம் கட்ட ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தையை, அடுத்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிகிற வரையில் காத்திருக்காமல், உடனடியாக தொடங்குவோம் என டிரம்ப் அறிவித்துள்ளார்.

தற்போது முதல் கட்ட ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருப்பது, அமெரிக்க விவசாயிகளுக்கும், சில்லரை வியாபாரிகளுக்கும் சாதகமான சூழலாக உள்ளது. இப்போது சீன பொருட்கள் மீதான 15 சதவீத வரி விதிப்பு ரத்து ஆகாமல் இருந்திருந்தால், கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் அமெரிக்க மக்கள் சீன ஆடைகள், ஸ்மார்ட் போன்கள், பொம்மைகள் போன்றவற்றை கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிநிலை ஏற்பட்டிருக்கும்.

அமெரிக்காவின் நடவடிக்கையில் திருப்தி அடைந்துள்ள சீனா, அமெரிக்காவில் இருந்து கூடுதல் அளவு சோயாபீன், பால் பொருட்கள், பிற விவசாய பொருட்களை வாங்க முன்வந்துள்ளது. இரு தரப்பு மோதல் ஏற்படுவதற்கு முன்பாக சீனாதான் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய விவசாய சந்தையாக இருந்தது. இப்போது 5-வது இடத்துக்கு சரிந்து விட்டது. இப்போது மீண்டும் சீன வர்த்தகத்துக்கான கதவை திறந்திருப்பதால் பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது.

Exit mobile version