வீர மரணம் அடைந்த தமிழக வீரர்களுக்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் நிதி

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்ரமணியன் மற்றும் அரியலூரை சேர்ந்த சிவசந்திரன் ஆகிய இரு வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இந்நிலையில், தீவிரவாதிகள் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்ததை அறிந்து வேதனை அடைந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தாக்குதலுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டுள்ளார். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தையும் அவர் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

உயிரிழந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுப்ரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோர் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாயை உடனடியாக வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version