மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் அதி நவீன வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. பல இழுபறிகளுக்கு மத்தியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை மதுரை தோப்பூரில் தேர்வு செய்தனர். இருப்பினும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கவில்லை என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கு விசாரணையின்போது மத்திய சுகாதாரத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்னர், 45 மாதத்திற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட தொடங்கும் என்றார். இந்தநிலையில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் திட்டமதிப்பீடு ஆயிரத்து 264 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version