பெரம்பலூர் அருகே கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது

பெரம்பலூர் அருகே சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த இருவரை காவல்துறையினர், சினிமா பாணியில் விரட்டிப் பிடித்து செய்து கைது செய்தனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து மதுரைக்கு பலகோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்தி வரப்படுவதாக, மாநகர காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி ஆய்வாளர் கார்த்திகைச் செல்வன் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு, பெரம்பலூர் அருகேயுள்ள திருமாந்துறை சோதனை சாவடியில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு காரில் 4 பைகளில் 180 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கஞ்சாவை கடத்தி வந்த மதுரையைச் சேர்ந்த படமுனியசாமி, வழி விடுமுருகன் ஆகிய இருவரும் ஆயுதங்களை எடுக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது உதவி ஆய்வாளர் கார்த்திகைச் செல்வன் மற்றும் அவரது குழுவினர், காரின் முன்பக்க கண்ணாடியில் துப்பாக்கியால் சுட்டு, தப்ப முயன்ற இருவரை விரட்டி சென்று பிடித்தனர். கைதானவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version