டெல்லியில் ஒரு மருத்துவமனையில் 25 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம்…

டெல்லியின் பல்வேறு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், ஒரு மருத்துவமனையில் இரண்டே மணிநேரத்தில் 25 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியிலுள்ள கங்கா ராம் மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 140-க்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நோயாளிகளுக்கு வழங்க இன்னும் 2 மணிநேரத்துக்கு மட்டுமே ஆக்ஸிஜன் இருப்பு இருப்பதாகவும், 60-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதால், உடனடியாக ஆக்சிஜனுக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மருத்துவமனை நிர்வாகம் அவசர வேண்டுகோளை விடுத்தது.

அந்த கோரிக்கை மனுவில், 60க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், அவர்களுக்கு விமானத்தில் மூலமாவது உடனடியாக ஆக்சிஜன் கொண்டுவரப்பட வேண்டும் என மருத்துவமனை இயக்குநர் தெரிவித்தார்.

எனினும், டெல்லி அரசால், இரண்டு மணிநேரத்திற்குள் ஆக்சிஜன் கொண்டுவர முடியாததால், 25 நோயாளிகள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து, எஞ்சிய நோயாளிகளை காப்பாற்றுவதற்காக, ஆக்சிஜனை டெல்லி அரசு அனுப்பி வைத்துள்ளது.

Exit mobile version