கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி

கர்நாடகாவில் காங்கிரஸ் உடன் கூட்டணி இறுதியாக இன்னும் 10 நாட்கள் ஆகும் என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூறியுள்ளதால், கடும் இழுபறி ஏற்பட்டதாக தெரிகிறது. 28 நாடாளுமன்றத் தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் தங்களுக்கு 12 தொகுதிகள் வேண்டும் என தேவேகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி காங்கிரசிடம் கேட்டு வருகிறது. ஆனால் 10 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என காங்கிரஸ் கூறியுள்ளதால் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த தேவேகவுடா, தொகுதி பங்கீட்டில் காங்கிரசுடன் தனது கட்சி கடும்போக்கை மேற்கொள்ளவில்லை என்றார். எனினும் தங்களது கூட்டணி இறுதி வடிவம் பெற இன்னும் 10 நாட்கள் ஆகும் என கூறியுள்ளார்.

தேர்தல் தேதி நெருங்கி வரும் வேளையில், கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி இறுதிவடிவம் பெறாதது இருகட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version