ஊழல் புகார்களின் ஆதாரங்களை அழிக்க முயற்சி : அலோக் வர்மா

மத்திய அரசு தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள அலோக் வர்மா குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, தனது பதவியை தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அவர் தனது பதவியை மீண்டும் ஏற்றார்.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு, அலோக் வர்மாவை தீயணைப்புத்துறை மற்றும் ஊர்க்காவல் படை இயக்குநராக பணியிட மாற்றம் செய்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு அலோக் வர்மா கண்டனம் தெரிவித்துள்ளார். தம்மை பணியிட மாற்றம் செய்தது தவறான நடவடிக்கை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சிபிஐ என்பது வெளியாட்களின் தலையீடு இன்றி சுதந்திரமாக செயல்பட வேண்டிய அமைப்பு என்று அவர் கூறியுள்ளார். இந்த அடிப்படையில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் ஆதாரங்களை தான் காக்க முயன்றதாகவும் ஆனால் மத்திய அரசு தன்மீது ஆதாரமற்ற, குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஊழல் புகார்களின் ஆதாரங்களை அழிக்க முயற்சி நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Exit mobile version