நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட்டு டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம்!

அமெரிக்காவில் ஜோ பைடன் வெற்றி அங்கீகாரத்தை எதிர்த்து, டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலியானதால் பதற்றம் நிலவுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில், தேர்தல் முடிவுகளை ஏற்க அதிபர் டோனால்ட் டிரம்ப் மறுத்து வருகிறார். தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்க அமெரிக்காவின் நாடாளுமன்ற கட்டடத்தில் பணிகள் நடைபெற்ற போது, அங்கு முற்றுகையிட்ட டிரம்ப் ஆதரவாளர்கள், ஜோ பைடனை அங்கீகரிக்க எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். நாடாளுமன்ற கட்டடத்திற்குள் டிரம்ப் ஆதரவாளர்கள் அதிரடியாக நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இதனிடையே, செய்தி சேகரிக்க கூடியிருந்த பத்திரிகையாளர்கள் மீது டிரம்ப் ஆதரவாளர்கள் கற்களை வீசி தாக்கியதுடன், கேமராக்களை உடைத்து நொறுக்கினர்.

இதனிடையே, தனது ஆதரவாளர்களை அமைதி காக்கும் படி டிரம்ப் கேட்டு கொண்டார். எனினும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனிடையே, கலவரத்தை தூண்டியதாக கூறி டிரம்பின் டுவிட்டர் கணக்கு 12 மணி நேரம் முடக்கப்பட்டது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகளும் முடக்கப்பட்டன. இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜோ பைடன், அமெரிக்க வரலாற்றில் இது கருப்பு நாள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் கலவரங்களுக்கு, உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் நடைபெறும் சம்பவங்கள் வேதனையளிப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சட்டவிரோத போராட்டங்கள் மூலம் ஜனநாயக நடைமுறைகளை தடுக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், உலகில் ஜனநாயகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அமெரிக்காவில், அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெற வேண்டும் எனவும், அமெரிக்கா நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள், மிகவும் இழிவானவை எனவும் தெரிவித்தார். இதேபோல், ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லியன், பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூன் டிரெய்னும் அமெரிக்க சம்பவத்தை கண்டித்துள்ளனர்.

 

 

 

 

Exit mobile version