மலையை ஆக்கிரமித்து தேவாலயம் அமைப்பு : தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தேவாலயத்தை அகற்ற கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் உள்ள மலை மீது மலைமாதா தேவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. 55 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தேவாலயத்தை அகற்ற கோரி, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், மலையை வெடி வைத்து தகர்த்து படிக்கட்டுகளும், கடைகளும் அமைக்கப்பட்டுள்ளதால் மலையில் உள்ள வன உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் வன விலங்குகள் நகருக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், மலைமாதா தேவாலயத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டுமென எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா கொண்ட அமர்வு, தமிழக அரசு, தொல்லியல் ஆய்வு துறை மற்றும் மலை மாதா தேவாலய நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version