மும்மொழிக் கொள்கை : தமிழகத்தில் அனுமதில்லை!!

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்வி இடம்பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளனர் என்றும், இதுதொடர்பாக பல காலகட்டங்களில் தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். 1963ம் ஆண்டைய அலுவல் மொழிகள் சட்டத்தின் 3வது பிரிவில், இந்தியை அலுவல் மொழியாக பின்பற்றாத மாநிலங்களை பொறுத்த வரையில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கில மொழியில்தான் இருக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இருந்த போதும், 1965ம் ஆண்டில் இந்தியை அலுவல் மொழியாக மாற்ற அப்போதைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது என்றும், அதை எதிர்த்து மாணவர்களும், மக்களும், தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் தீவிரமாக நடத்தினர் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

மக்களிடையே மும்மொழிக் கொள்கையை பற்றிய கவலைகள் நீங்காததால் பேரறிஞர் அண்ணா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 1968ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி, தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும் மும்மொழி திட்டத்தை அகற்றி விட்டு, தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து இந்தி மொழியை அறவே நீக்கிட இந்த மாமன்றம் தீர்மானிப்பதாக, வரலாறு போற்றத்தக்க தீர்மானத்தை நிறைவேற்றியதாகவும் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்தி மொழி பாட திட்டத்தில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பேரறிஞர் அண்ணாவால் தெளிவுற உரைக்கப்பட்ட இரு மொழிக் கொள்கையை செயல்படுத்துவதான் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் உறுதியான கொள்கையாக இருந்தது என்றும், அதன்படியே அவர் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த போது, 1986ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி, இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியை திணிக்க கூடாது என்பதிலும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிர்த்து முறியடிப்பதிலும் உறுதியாக உள்ளோம் என சூளுரைத்ததாகவும், மேலும் இந்தியாவில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் எனவும் மாண்புமிகு அம்மா வலியுறுத்தி வந்ததாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோர், இந்தி திணிப்பை ஆணித்தரமாக எதிர்த்து வந்தனர் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். இப்படிப்பட்ட மாபெரும் தலைவர்கள் வழிவந்த மாண்புமிகு அம்மாவின் அரசும், மத்திய அரசு, வரைவு தேசிய கல்விக் கொள்கையை வெளியிட்ட போதே, அதில் மும்மொழிக் கொள்கை இடம்பெற்றதை சுட்டிக்காட்டி அதனை தீவிரமாக எதிர்த்தது என்றும், தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் இரு மொழிக் கொள்கையையே கடைபிடிப்போம் என உறுதிபட தெரிவித்து 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி, மாண்புமிகு பாரத பிரதமருக்கு தாம் கடிதம் அனுப்பியதாகவும், இரு மொழிக் கொள்கையையே மாண்புமிகு அம்மாவின் அரசு தொடர்ந்து கடைபிடிக்கும் என்பதை கடந்த ஆண்டு தமது சுதந்திர தின உரையிலும், சட்டமன்றத்தில் நடைபெற்ற பல்வேறு விவாதங்களின் போதும் தெள்ள தெளிவாக எடுத்துரைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது மத்திய அரரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம் பெற்றிருந்தாலும், மாண்புமிகு அம்மாவின் அரசு மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இருமொழிக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்றும் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளும், இருமொழி கொள்கையை பின்பற்றுவதையே கொள்கையாக கொண்டுள்ளனர் என்றும், இந்த சூழ்நிலையில் மத்திய அரசு அறிவித்த தனது புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்வி இடம்பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஏற்று மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்களின் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை கேட்டுக் கொள்வதாக அறிக்கையில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ, பாதிப்பு ஏற்படும் போது அந்த பாதிப்பை களைய உடனடி நடவடிக்கை எடுக்கும் அரசு, மாண்புமிகு அம்மாவின் அரசு தான் என்பதை தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

Exit mobile version