பெண்களுக்கான வேலைவாய்ப்பு 30% ஒதுக்கீட்டில் திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம்

அரசு வேலைவாய்ப்புகளில், பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டில், திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மூன்றாம் பாலினத்தவர்களை தனி பிரிவாக பிரித்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி கிரேஸ் பானு கணேசன் என்ற திருநங்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், தமிழக சமூக நலத்துறை ஆணையர் அமுதவள்ளி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி நல வாரியம் துவங்கப்பட்டு, நலத் திட்ட உதவிகள் வழங்க, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

சாதிச் சான்று இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக கருதி, இடஒதுக்கீடு வழங்க 2017ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டில், திருநங்கைகள் விண்ணப்பிக்கும் வகையில், 2015ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூலை 17ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Exit mobile version