பிள்ளையார் அணை நீர்விழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

போடிநாயக்கனூர் அருகே உள்ள பிள்ளையார் அணை நீர்விழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே பிள்ளையார் அணை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மூணாறு செல்லும் சுற்றுலாப் பயணிகள் இந்த நீர்வீழ்ச்சியில் ஆனந்த குளியலிட்டு, ஒய்வு எடுத்து செல்வது வழக்கம். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் பிள்ளையார் அணை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.எனவே, சுற்றுலா பயணிகள் குளிக்கவும், துணி துவைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் நீரில் இறங்கக் கூடாது என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version