செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணை பகுதியில் ஆபத்தை உணராமல் குளித்து வரும் சுற்றுலா பயணிகளை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணை தற்போது நிரம்பி வழிகிறது. இயற்கையான சூழலில் குண்டாறு அணை அமைந்துள்ளதால் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலை மோதுகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களில் குற்றாலத்துக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் இந்த அணைக்கு வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அணை பகுதியில் குளித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், எச்சரிக்கையை மீறி குளிப்பவர்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.