7வது கட்ட தேர்தல்: வாக்குப்பதிவுக்கான பொருட்களை அனுப்பும் பணி தீவிரம்

மக்களவைக்கு 7வது கட்ட தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், தேர்தல் பொருட்களை அனுப்பும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் 2 மாதமாக நடந்து வந்த மக்களவை தேர்தல் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்ட தேர்தலில் இதுவரை 6 கட்டங்களுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. இந்தநிலையில், 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து, 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 59 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியும் அடங்கும். பீகாரில் 8 தொகுதிகள், ஜார்க்கண்டில் 3, மத்தியப் பிரதேசத்தில் 8, பஞ்சாபில் 13, சண்டீகரில் 1, உத்தரப் பிரதேசத்தில் 13, இமாசல பிரதேசத்தில் 4, மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள் என மொத்தம் 59 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. மேற்கு வங்கத்தில் பெரும் பதற்றம் நிலவுவதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாராணாசியில் பிரதமர் மோடி, பீகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அவரை எதிர்த்து காங்கிரசில் இணைந்த நடிகர் சத்ருகன் சின்ஹா, பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் பாஜக சார்பில் நடிகர் சன்னி தியோல், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றிரவுக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

Exit mobile version