இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் மானியக் கோரிக்கை விவாதம்

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீது இன்று முதல் விவாதம் நடைபெறுகிறது. அதன்படி, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது இன்று நடைபெறும் விவாதத்துக்கு அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர்.

ஜூலை 1 திங்கள் கிழமையன்று பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கை தொடங்குகிறது. முதல் நாள் வனம், சுற்றுச்சூழல் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

ஜூலை 2 ம் தேதி பள்ளிக் கல்வித் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீதும், ஜூலை 3 ஆம் தேதி கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மீது விவாதம் நடைபெறும். ஜூலை 4ல் எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதிக்கப்படுகிறது

ஜூலை 5 மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையின் மானியக் கோரிக்கைகள் மற்றும் கால்நடை பராமரிப்பு, பால் வளம் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதும் விவாதம் நடைபெறுகிறது. ஜூலை 6 மற்றும் 7 ஆம் தேதி வாரவிடுமுறை விடப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ஜூலை 8 ஆம் தேதி திங்கள் கிழமையன்று, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை, நீதி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்படுகின்றன.

ஜூலை 9 ஆம் தேதியன்று சிறைச்சாலைகள், சட்டத் துறை மற்றும் ஜூலை 10ஆம் தேதியன்று சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கோரிக்கைகள் விவாதிக்கப்படுகின்றன.

ஜூலை 11ஆம் தேதி, தொழில் துறை மானியக் கோரிக்கைகள் மீதும் , சிறு, குறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும்.

ஜூலை 12ல் கைத்தறி மற்றும் துணிநூல் துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும்.

ஜூலை 13 மற்றும் 14 ஆம் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு வார விடுமுறை விடப்படுகிறது. ஜூலை 15ல் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டடங்கள், பாசனம் துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்படுகின்றன.

ஜூலை 16ல் மக்கள் நல வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. ஜூலை 17ம் தேதி வேளாண்மைத் துறை மற்றும் ஜூலை 18 ஆம் தேதி சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கைகள் மீதும் விவாதிக்கப்படுகின்றன.

ஜூலை 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்படுகின்றன.

ஜூலை 20 மற்றும் 21 ஆம் தேதி வார விடுமுறை விடப்படுகிறது. ஜூலை 22 ஆம் தேதி, காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.

ஜூலை 23ல் காவல் துறை மீது விவாதம் நடைபெறும். மேலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகளின் மானியக் கோரிக்கைகளுக்கு, பதிலுரை அளிக்கப்படும்.வணிக வரிகள் முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப் பதிவு, தகவல் தொழில் நுட்பவியல் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும்,

ஜூலை 24ல் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதும், ஜூலை 25 ல் போக்குவரத்துத் துறை மீதும் இயக்க ஊர்திகள் குறித்த சட்டங்களின் நிர்வாகம் மானியக் கோரிக்கைகள் மீதும் விவாதிக்கப்படுகின்றன.

ஜூலை 26 ல் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கதர் கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் துறைகள் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. ஜூலை 27 மற்றும் 28 ஆம் தேதி வார விடுமுறை விடப்படுகிறது.

ஜூலை 29 ஆம் தேதி பொதுத் துறை, மாநிலச் சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, திட்ட வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை,ஓய்வூதியங்கள் மற்றும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகள் மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகின்றன.

ஜூலை 30 ஆம் தேதி பொதுத்துறை, மாநிலச் சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளரச்சித் துறை, திட்ட வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை மற்றும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகள் மீதான மானியக் கோரிக்கை உரைகளுக்கு பதிலுரை வழங்கப்படும்.

மொத்தம் 23 நாட்கள் சட்டபேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும் என்றும், அனைத்து நாட்களும் கேள்வி நேரம் இருக்கும் என்றும் சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

Exit mobile version