உலக ரத்த தான தினம் இன்று

ஒவ்வொரு நாளும் மருத்துவமனையில் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிகிச்சைக்கு முக்கியமாக தேவைப்படுவது ரத்தம். விபத்துகளானாலும் சரி. அறுவை சிகிச்சையானாலும் சரி. ரத்தம் அதிக அளவில் தேவைப்படுகிறது. கடந்த காலங்களில் பணத்திற்காக ரத்தம் அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் அதுவே தானமாக மாறியது. தற்போது எவரும் பணத்திற்காக ரத்தம் கொடுப்பதில்லை.

தற்போது நடைமுறையில் உள்ள A, B, மற்றும் O வகையான ரத்த பிரிவுகளை மருத்துவ உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் கார் லேன்ஸ்டைனர் என்பவர். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ஆம் தேதியை ரத்த தான தினமாக உலக சுகாதார நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

ரத்தத்தில் ஹிமோக்ளோபின் குறைபாட்டால் வரும் தலசீமியா, ரத்த கசிவு நோய் சிலருக்கு அதிகமாக இருக்கிறது. அவர்களது தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமானால் மாதம்தோறும் அவர்களுக்கு ரத்தம் தேவைப்படுவதாக கூறுகிறார் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி.

உலகளவில், ஒரு மருத்துவமனையில் ஏழு பேர் அனுமதிக்கப்பட்டால், அதில் ஒருவருக்கு ரத்தம் கட்டாயம் தேவைப்படுகிறது. ஒருவர் ரத்த தானம் செய்வதின் மூலம் அடுத்த 48 மணி நேரத்தில் அவரது உடலில் புதிய ரத்தம் உருவாகிறது. ஒருமுறை ரத்தம் கொடுத்தவர் அடுத்த மூன்று மாதத்திற்கு பிறகே மீண்டும் ரத்த தானம் செய்ய முடியும்.18 வயது முதல் 65 வயதுக்குட்பட்ட 50 கிலோ எடைக்கும் அதிகமாக இருப்பவர்கள் ரத்தத்தை தானமாக அளிக்க தகுதி உடையவர் என்கிறார் மருத்துவர்.

நாம் ரத்த தானம் செய்த பிறகு அந்த ரத்தம் யாருக்கு செலுத்தப்படுகிறது என்பது தெரியாது. ஆனால் ஓர் உயிரை நாம் காப்பாற்றி உள்ளோம் என்பது மட்டும் உறுதி.

ரத்த தானம் செய்வோம். இன்னுயிர் காப்போம்.

நியூஸ் ஜெ. செய்திகளுக்காக கோபாலகிருஷ்ணன்.

Exit mobile version