மகாகவி பாரதியின் நூற்றாண்டு நினைவு தினம் இன்று…

பாடுபொருள் எத்தனை தீவிரம் கொண்டதாக இருந்தாலும், அதனைப் பாமரருக்கும் கடத்திவிடலாம் என்பதை தனது கவிதைகள் மூலம் நிரூபித்துக் காட்டிய மகாகவி பாரதியின் நூற்றாண்டு நினைவு தினம் இன்று.

1882 ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் பிறந்த மகாகவி பாரதி, பொது வாழ்க்கையில், நவீனத் தமிழுக்கு வடிவம் கொடுத்து, கவிதையிலும் உரைநடையிலும் தமிழை புதிய திசைக்குத் திருப்பி பெருமைத் தேடி தந்தார். கவிஞர், உரைநடை எழுத்தாளர், பத்திரிகையாளர் என இளம் வயதிலேயே பன்முக ஆற்றலை வெளிப்படுத்திய மகாகவி, சுதந்திர போராட்டம் வீறு கொண்டிருந்த காலகட்டத்தில், தமது பாடல்களால் மக்களிடையே தேசபக்தியை ஊட்டினார். பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, பாப்பா பாட்டு, சின்னஞ்சிறு கிளியே, புதிய ஆத்திசூடி, ஞான ரதம் என பாரதியின் மேலும் பல படைப்புகள், தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்த வரங்கள் எனக் கூறலாம். இதனால் தான் பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டு நாட்டுடமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையது என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்கவிதையின் புலவனாகவும், பெண்ணுரிமைப் போராளியாகவும் பாரதிக்கு மேலும் பல முகங்கள் இருந்தன. பாரதி மறைந்தாலும் புரட்சிகரமான அவரது படைப்புகளால் என்றென்றும் அவர் இவ்வுலகில் நீக்கமற நிறைந்திருக்கிறார்.

Exit mobile version