இந்தியர்களை மீட்டுவர ஈரானுக்கு சி 17 விமானம் புறப்பட்டது

கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக, இந்தியர்களை மீட்டுவர ஈரானுக்கு சி 17 விமானம் புறப்பட்டு சென்றது.

ஈரானில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தற்போது வரை, 237 பேர் பலியாகி உள்ளனர். 7 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் சுமார் 2 ஆயிரம் இந்தியர்கள் உள்ளதாக கருதப்படுகிறது. ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்தனர். இந்த நிலையில், இந்தியர்களை மீட்டுவர உத்தரபிரதேச மாநிலம் ஹிண்டன் விமானப்படை தளத்தில் இருந்து, சி17 என்ற விமானம் நேற்று இரவு 8.30 மணிக்கு ஈரான் புறப்பட்டது. இந்த விமானத்தில் மருத்துவ குழுவினரோடு, பயணிகளை தனிமைப்படுத்த தேவையான வசதிகளும் உள்ளன. ஈரானின் தெஹ்ரானில் இருந்து இந்த விமானம், இன்று காலை இந்தியா திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் வருபவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளுடன் கூடிய தனிமை முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.

Exit mobile version