`பணம் வேண்டும்; தந்தை வேண்டாமா?’ – மகன்களை கேள்வியால் துளைத்த நீதிமன்றம்!

டெல்லியில் இரண்டு சகோதரர்கள் தனது தந்தையை வீட்டை வீட்டு வெளியேறக் கட்டாயப்படுத்தியதுடன், மாத செலவுக்கு பணம் வழங்க மறுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பான வழக்கில் மகன்களை கேள்வியால் துளைத்தெடுத்துள்ளது உச்சநீதிமன்றம். இருவரும் தங்கள் தந்தையின் வீட்டு வாடகையில் வருமானம் ஈட்டுவது தெரியவர உச்சநீதிமன்ற பெஞ்சின் கோபம் கடுமையானது.

டெல்லியைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகன்கள், தன்னை சரியாக கவனிப்பதில்லை; வீட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்துகிறார்கள் என்று கூறி தீர்பாயத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், இரண்டு மகன்களும், அவரது தந்தைக்கு மாதந்தோறும் 7ஆயிரம் தரவேண்டும் என உத்தரவு பிறப்பிந்திருந்தார். அந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் இரண்டு மகன்களும் மேல்முறையீடு செய்தனர். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தீர்பாயத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த உத்தரவால் அதிருப்தியடைந்த தந்தை, உச்சநீதிமன்றத்தை நாடினார். உச்சநீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி இரு மகன்களையும் கடுமையாக சாடினார். “மகன்கள் தங்கள் தந்தைக்கு ஒரு உதவியும் செய்யவில்லை. இறுதிகாலத்தில் தந்தையை, பராமரிப்பது மகன்களின் கடமை” என்று நீதிபதி கன்வில்கர் கூறினார்.

“நீங்கள் அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை, அவர் உங்கள் தந்தை, நீங்கள் இருவரும் எம்.என்.சி.களில் பணிபுரிகிறீர்கள், அவரால் தான் நீங்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்” என நீதிபதிகள் உருக்கமாகப் பேசினர். இருவரும் தங்கள் தந்தையின் வீட்டு வாடகையில் வருமானம் ஈட்டுவது தெரியவர உச்சநீதிமன்ற பெஞ்சின் கோபம் கடுமையானது. “இந்த சொத்து கூட உங்கள் தந்தை காரணமாக உங்களுக்கு வந்துள்ளது. குறைந்தப் பட்சம் அவரது பங்கைக் கூடக் கொடுக்காமால் எப்படி அதை அனுபவிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்

“இன்றைய காலக்கட்டத்தில் தனிநபர் வாழ்க்கைக்கு ரூ.7000 போதாது. ரூ.10000 தர வேண்டும்” என தந்தையின் வழக்கறிஞர் முறையிட்டார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஒரு வாரத்து காலத்துக்குள் மகன்கள் பதிலளிக்க உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

Exit mobile version