இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட செப். 22, 23 தேதிகளில் விருப்பமனு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் விருப்ப மனுக்களைப் பெற்று வழங்கலாம் என அதிமுக தலைமையகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில், நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளில் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமையகத்தில், 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை வரும் 23ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் அளிக்க வேண்டும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

இதனிடையே, இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிப்பவர்களிடம் வரும் 23 ஆம் தேதி நேர்காணல் நடத்தப்படும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அன்று பிற்பகல் 3.30 மணியளவில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

Exit mobile version