பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது

பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கி இருக்கிறது. . முதற்கட்டமாக சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி பதிவு இணையதளம் மூலமாக கடந்த ஜூலை 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 24-ம் தேதி நிறைவு பெற்றது.

22 ஆயிரத்து 671 அரசுப் பள்ளி மாணவர்கள் உட்பட ஒரு லட்சத்துக்கு 74 ஆயிரத்து 930 மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தனர்.

அதன்படி, விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நிறைவு பெற்று, அம்மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாக அரசுப் பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியவர்களுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி இருக்கும் நிலையில் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரையும் நடக்கவுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் 440 கல்லூரிகள் மட்டுமே பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்கிறது.

ஒரு லட்சத்து 39 ஆயிரம் பேர் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

இதனால் கல்லூரிகளில் காலியாக இருக்கும் இடங்களைவிட குறைவான மாணவர்களே கலந்தாய்வில் கலந்து கொள்ள உள்ளனர்.

Exit mobile version