கடத்தப்படும் கனிம வளங்கள்… கண்துடைப்புக்கு வேலைசெய்கிறதா காவல்துறை?

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்த நிலையில், காவல்துறை கண் துடைப்பிற்காக நடவடிக்கை மேற்கொண்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் மூலம் கனிம வளங்கள் கடத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் கூறிவந்தனர்.

இந்நிலையில் கனிம வளங்கள் கடத்தியதாக காவல்துறையினர் 10 வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளனர். சோதனைச் சாவடிகள் வழியாக கனரக லாரிகள் மாநிலத்தை கடக்கும் நிலையில் அங்கு சோதனை மேற்கொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தினசரி 300 முதல் 500 கனரக வாகனங்களில் கனிமவளங்கள் கடத்தப்படுவதாக புகார் கூறும் நிலையில், வாகன தணிக்கை என்ற பெயரில்10 வாகனங்களை மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டிருப்பது வெறும் கண் துடைப்பு நடவடிக்கை என்றே சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக 50 கனரக வாகனங்கள் மட்டுமே அனுமதியுடன் செயல்படும் நிலையில், கடந்த 2 மாதங்களில் சுமார் 2 ஆயிரம் கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனுமதியின்றி இயக்கப்படும் கனரக வாகனங்களை பறிமுதல் செய்யாதது ஏன் என்ற கேள்வியையும் சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.

Exit mobile version