ஸ்டெர்லைட் ஆலை ஆய்வறிக்கை தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் – தேசிய பசுமை தீர்ப்பாயம்

ஸ்டெர்லைட் ஆலை ஆய்வறிக்கை தொடர்பாக தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வரும் 7-ம் தேதிக்குள் பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்புகள் ஏற்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான 3 பேர் குழுவை தீர்ப்பாயம் அமைத்தது. ஆய்வை முடித்த அந்தக் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், முன்னறிவிப்பின்றி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாக தருண் அகர்வால் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், அறிக்கையை இன்னமும் முழுவதுமாக படிக்கவில்லை எனக் கூறினர்.

ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள காப்பர் கழிவுகளை அகற்ற வேண்டும் என்றும், துறைமுகத்தில் இருந்து மூடிய கண்டெய்னர் மூலம் காப்பர் துகள்களை ஆலைக்கு கொண்டுவர வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். வழக்கை வரும் 7-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Exit mobile version