திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்- லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று சூரசம்ஹாரம் வெகுவிமர்சையாக கொண்டாப்படுகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து திரளான பக்தர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 8-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா உத்தரவின் படி, 3 ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது.

Exit mobile version