இந்த ஆண்டு குற்றங்கள் குறைவாக உள்ளது – ஏ.கே.விஸ்வநாதன்

இந்தியாவிலேயே மிக பாதுகாப்பான அமைதியான நகரமாக சென்னை விளங்குவதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை பழைய பல்லாவரம் ரேடியல் சாலையில் ஆயிரத்து 14 சிசிடிவி கேமராக்கள் இயக்கத்தினை சென்னை காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு குற்றங்கள் குறைவாக உள்ளது என கூறினார்.

மேலும்,குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிசிடிவி கேமராக்கள் பெரும் உதவியாக இருப்பதால், செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு குறைந்துள்ளதாகவும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக செல்லும் சூழல் உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் குற்றங்கள் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார்.

சிசிடிவி மூலம் பெசன்ட் நகர் கொலை குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்ததாகவும் கூறினார். அனைவரும் வீடுகள், கடைகள், அலுவலகத்தில் வெளியில் தெரியும்படி சிசிடிவி களை பொருத்த வேண்டும் என குறிப்பிட்டார். சென்னையில் உள்ள எம்.பிக்கள் எம்.எல்.ஏக்.,கள் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் சிசிடிவி பொருத்துவதற்கு உதவி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இணை ஆணையர் மகேஸ்வரி துணை ஆணையர் முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த 4 மாதங்களில் மட்டும் சென்னையில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version