கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 2 ஆயிரத்து 615 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, பக்தர்களின் வசதிக்காக, 2 ஆயிரத்து 615 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

உலக புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம், வரும் 10ஆம் தேதி திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. மகா தீபத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்பதால், அவர்களின் வசதிக்காக, 2 ஆயிரத்து 615 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வருகிற 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை, 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில், பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரத்து 612 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி போக்குவரத்து கழகங்கள் சார்பில், ஆயிரத்து 3 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சிறப்பு பேருந்து வசதியை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என போக்குவரத்துத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Exit mobile version