திருமாவளவன் விளம்பர பேனரை கிழித்ததாக திமுக, அமமுக மீது விசிக புகார்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே திருமாவளவன் விளம்பர பேனரை கிழித்ததாக திமுக, அமமுகவினர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

மணப்பாறையை அடுத்த கோவில்பட்டி அருகே யானைக்கால் என்ற இடத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெற்றிபெற்றதை கொண்டாடும் வகையில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருமாவளவன் பேனரை கிழித்ததாக திமுகவை சேர்ந்த மினிக்கியூர் திமுக ஊராட்சி செயலாளர் முருகன், திமுக நிர்வாகி சதிஷ், அமமுக நிர்வாகி மகேந்திரன் ஆகியோர் மீது விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் வடிவேல் என்பவர் வளநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து இருதரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version