3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், கடலூர், நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தேரிவித்துள்ளது

சென்னையைப் பொருத்தவரை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசையும் ஒட்டி பதிவாகக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த பகுதிகள்:

பொன்னமராவதியில்(புதுக்கோட்டை) 7 செ.மீட்டர் மழையும், மானாமதுரை (சிவகங்கை), இலுப்பூர் புளிப்பாட்டி (மதுரை), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி) ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ மழையும், பரமக்குடி (ராமநாதபுரம்), சங்கரிதுர்க் (சேலம்), காரைக்கால், நாகப்பட்டினம், நெய்வேலி (கடலூர்) ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ மழையும், திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை ), கொடுமுடி (ஈரோடு), அரவக்குறிச்சி (கரூர் ) ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.

Exit mobile version