"34 மணி நேரத்திற்கு பிறகு" தமிழ்நாடு – கேரளா இடையே வாகனங்கள் இயக்கம்

தேனி போடிமெட்டு மலைப்பாதையில் 9-வது கொண்டை ஊசி வளைவு அருகே ஏற்பட்ட மண்சரிவு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து, 34 மணி நேரத்திற்கு பின் மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கியது.

பலத்த கனமழை காரணமாக கடந்த செவ்வாய்கிழமை இரவு, போடிமெட்டு மலைச்சாலையில் 9-வது கொண்டை ஊசி வளைவு அருகே ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனிடையே ஆங்காங்கே மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டதுடன், ராட்சதப் பாறைகளும் உருண்டு விழுந்தன.

தொடர்ந்து மழை பெய்ததாலும், இரவு நேரம் என்பதாலும் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாததால், மலைப்பாதை மூடப்பட்டது. இதனால், கேரளாவிற்கு சென்ற கூலித்தொழிலாளர்கள் போடி முந்தல் பகுதியில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

அதே போன்று, கேரளாவில் இருந்து தமிழ்நாடு வந்த வாகனங்கள் போடிமெட்டு முதல் சுண்டல் வரை நீண்ட வரிசையில் காத்திருந்த காத்திருந்தனர். பின்னர், கேரளப் பகுதிகளுக்கு திரும்பிச் சென்றன. சாலையில் விழுந்த ராட்சத மரம், பாறைகளை அகற்றி சாலை சீரமைக்கப்பட்டது.

இதையடுத்து சுமார் 34 மணி நேரத்திற்கு பிறகு தமிழ்நாடு – கேரளா இடையே போக்குவரத்து தொடங்கியது.

Exit mobile version