2020ம் ஆண்டு ஜூன் 1 முதல் "ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு" திட்டம்: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்

2020ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்களவையில் பேசிய மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், 2020ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று கூறினார். இந்த திட்டம் அமலுக்கு வந்தால், நாட்டிலுள்ள எந்த ரேஷன் கடையிலும் தங்களுக்கு உரிய உணவுப் பொருட்களை பெறலாம் என்றும் சொந்த மாநிலத்தை விட்டு இடம் பெயர்ந்து வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு இந்த திட்டம் உதவும் எனவும் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார். அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் அல்லது ஆதார் மூலம் அடையாளம் கண்டறிந்து பயனாளிகளுக்கு பொருட்கள் வழங்கப்படும் என்று கூறிய அவர், இதற்காக ஒவ்வொரு ரேஷன் கடைகளும் ஆன்லைன் மூலம் இணைக்கப்படும் என்றார். இத்திட்டத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு தேவையான செயல்திட்டத்தை உருவாக்க மற்றும் சர்வதேச தரத்துக்குத் தேவையான வழிகளையும் ஆய்வு செய்ய இந்தியத் தர நிர்ணய நிறுவனத்திடம் கேட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Exit mobile version