டெல்லி சட்டமன்ற தேர்தலுக்காக விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள்

டெல்லி சட்டமன்றத்தின் 70 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

டெல்லி சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகிற 22ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தேர்தலுக்கான பணிகளை, தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகிறது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது. பாஜக 67 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் 66 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ராஷ்டீரிய ஜனதா தளம் 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

மொத்தம் 1 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், 13 ஆயிரத்து 750 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. வரும் 11ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஆட்சியை பிடிக்கும் கட்சிகள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் என டெல்லி வாழ் தமிழர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version