நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று மாலை 6 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று மாலை 6 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். கர்நாடகத்தில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சராக குமாரசாமி இருந்து வருகிறார். இந்த நிலையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். இதனால் தனது அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கடந்த 18ம் தேதி குமாரசாமி தாக்கல் செய்தார். அந்த தீர்மானத்தின் மீதான விவாதம் சட்டபேரவையில் நேற்றும் தொடர்ந்தது.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இதற்கிடையே, நள்ளிரவு ஆனாலும் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியே ஆகவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா வலியுறுத்தினார். இதனால், இரவு 12 மணிவரை சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் நம்பிக்கை வாக்கெடுப்பை செவ்வாயன்று நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இன்று மாலை 4 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தை முடிக்க வேண்டும் என்றும், மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இன்று மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று நம்புவதாக கூறி, வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Exit mobile version