இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவு

இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்த நிலையில் ஜெயவர்தனா, டாம் மூடி, லால்சந்த் ராஜ்புட் போட்டியில் உள்ளனர்.

இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, சஞ்சய் பாங்கர், பாரத் அருண், ஸ்ரீதர் உள்ளிட்ட 7 பேரின் பதவிக்காலம் நடைபெறவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் முடிவடைகிறது. இந்த நிலையில்,புதிய பயிற்சியாளர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்றுடன் அவகாசம் முடிந்தது.தற்போதுள்ள பயிற்சியாளர்கள் விண்ணப்பிக்கவில்லை என்ற போதிலும், தேர்வில் பங்கேற்கலாம். இதனிடையே 2007ல் இந்தியாவுக்கு ‘டுவென்டி-20’ உலக கோப்பை வென்று தந்த லால்சந்த் ராஜ்புட், ராபின் சிங், பிரவீண் ஆம்ரே உள்ளிட்டோர் போட்டியில் குதித்துள்ளனர். சர்வதேச அளவில் ஜெயவர்தனா, டாம் மூடி, மைக் ஹெசன் உள்ளிட்டோர் பயிற்சியாளராக விண்ணப்பித்துள்ளனர். தென் ஆப்ரிக்கமுன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ், பீல்டிங் பதவிக்கு போட்டியிடுகிறார்.இவர்களில் சரியான பயிற்சியாளரை, சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் படி நியமிக்கப்பட்ட கபில் தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி தேர்வு செய்ய உள்ளது. தேர்வுக்குழு தலைவர் பிரசாத் தலைமையிலான குழு, மற்ற பயிற்சியாளர்களை முடிவு செய்ய உள்ளது. வரும் அக். 22ல் இந்திய கிரிக்கெட் போர்டுக்கு தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் பயிற்சியாளர் யார் என்பது முடிவு செய்யப்படலாம். தலைமை பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

Exit mobile version