கட்சிக்கொடி ஏற்றும் போது தெலுங்கு தேச வேட்பாளருக்கு குண்டடி…

ஆந்திர மாநிலத்தில் கட்சிக்கொடியை ஏற்றி வைக்கும் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் தெலுங்கு தேசம் வேட்பாளரின் கால்களில் குண்டடிப்பட்டது. கர்னூல் மாவட்டத்தில் உள்ள மந்த்ராலயம் சட்டமன்ற தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக டிக்கா ரெட்டி என்பவர் போட்டியிடுகிறார். இந்தநிலையில் டிக்காரெட்டி, ஆந்திராவின் காகொல்லா கிராமத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் கொடியை ஏற்றி வைக்க முயன்றார்.

அப்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் அவரை வழிமறித்து, கிராமத்தில் கொடியேற்ற அனுமதி மறுத்தனர். அப்போது டிக்காரெட்டியை காப்பாற்றுவதற்காக, அவரது ஆதரவாளர்கள் வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கி சூடு நடத்தினர். ஆனால் குறி தவறிய குண்டுகள் டிக்காரெட்டியின் இடது காலிலும், மற்றொரு குண்டு மாதவரம் எஸ்ஐ வேணுகோபாலின் வலது காலிலும் பாய்ந்தது.

இதையடுத்து காயமடைந்த இருவரும் மந்த்ராலயத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version