உதகையில் கோடை சீசன் முடிந்ததையடுத்து, சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைய துவங்கியுள்ளது. இதனால் முக்கிய சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
உதகையில் கோடை சீசன் முடிவடைந்து, பள்ளிகள் திறந்துள்ளதாலும், தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதாலும் வருகை தரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்துள்ளது. தற்போது காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவி வருகிறது. கடந்த வாரம் வரை சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதிய நிலையில் இந்த வாரம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிக குறைவாக காணப்படுகிறது. முக்கிய சுற்றுலா இடங்களான தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா மற்றும் தொட்டபெட்டா உள்ளிட்ட இடங்கள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டதால் அனைத்து இடங்களும் வெறிச்சோடிக் காணப்பட்டன. குறிப்பாக தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டதால், கூட்ட நெருக்கடி இல்லாமல் மலர்களை கண்டு ரசிக்கும்படியாக இருந்ததாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.