40 ஆண்டுகளில் தமிழகத்தை புரட்டி போட்ட புயல்கள்

ஒருபுறம் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது கஜா புயல்… இந்தநிலையில் கடந்த 40 ஆண்டுகளில் வடக்கிழக்கு பருவமழை காலத்தில் உருவான சில புயல்களின் தன்மை மற்றும் அவை ஏற்படுத்திய சேதங்கள் குறித்து தற்போது சுருக்கமாக காண்போம்.

1978-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி வங்க கடலில் உருவான 04B என்ற புயல் அதே மாதம் 29-ம் தேதி இலங்கையின் கிழக்கு மாகாணத்தை மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து சூறையாடியது.

1984-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி ஸ்ரீஹரிக்கோட்டாவை தாக்கிய Cyclone Three(3B) புயலில் சிக்கி 430 பேர் உயிரிழந்தனர்… அப்போது அந்த புயலின் வேகம் மணிக்கு 155 கிலோ மீட்டர் என கணக்கிடப்பட்டது..

அதே ஆண்டு நவம்பர் 30-ல் புயலாக உருவெடுத்த Cyclone Four (4B)… மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் கடலூரை கடந்து அரபிக்கடலில் சங்கமித்ததுடன் அப்படியே சென்று சோமாலியாவை தாக்கியது.

1993-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி காரைக்கால் அருகே மணிக்கு 198 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்த BOB 02 என்ற புயலால் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 600 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின… 70 பேர் உயிரிழந்தனர்… புதுச்சேரியில் மட்டும் 20 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தது.

சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே 1996-ம் ஆண்டு டிசம்பர் 6-ல் கரையை கடந்தது BOB 06 (08B)… அப்போது சென்னையில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசியது.

2000-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி கடலூர் அருகே கரையை கடந்தது BOB 05 புயல்… இதனால் மணிக்கு 190 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றில் சிக்கி தென்னை உள்ளிட்ட 30 ஆயிரம் மரங்கள் வேறோடு சாய்ந்தன.

அதி தீவிர புயலான தானே, 2011-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 125 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசிய நிலையில், 46 பேர் பலியாகினர்.

2016-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி சென்னை அருகே கரையை கடந்த வர்தா புயல் மாநகரையே நிலைக்குலைய செய்தது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு லட்சம் மரங்கள் சாய்ந்தன… அதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 155 கிலோ மீட்டராக கணக்கிடப்பட்டிருந்தது.

Exit mobile version