கோவை பீளமேடு பகுதியில் ஏடிஎம் இல் புகுந்த நாகப்பாம்பை கண்டு வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்
பீளமேடு அருகே தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றில் பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர் அங்கு நாகப்பாம்பு ஒன்று படமெடுத்து ஆடுவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். இதையடுத்து அவர் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். ஏடிஎம் மையத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்துவிட்டதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பாம்பு பிடிப்பதில் கைத்தேர்ந்தவரான சஞ்சய் என்பவரை அழைத்து வந்தனர். சஞ்சயிடம் பிடிபட மறுத்த பாம்பு அங்கிருந்த பேட்டரிக்கு பின்னால் ஒளிந்து கொண்டது. நீண்ட போராட்டத்திற்கு பின்னர் சஞ்சய் அந்தப் பாம்பை லாவகமாக பிடித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிடிபட்ட பாம்பு மதுக்கரை வனப்பகுதியில் விடப்பட்டது.