அதிக சேட்டை செய்த தம்பியை ஆத்திரத்தில் அடித்தே கொன்ற அக்கா!!

வீட்டில் அதிகமாக குறும்புத்தனம் செய்ததால் 5 வயது சிறுவனை அடித்து கொலை செய்து விட்டு விளையாடிய போது மயங்கி விழுந்ததாக நாடமாடிய கொடூர அக்காவை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி சூசைமேரி. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை சரிவர கவனித்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் 2 வது குழந்தை கீர்த்தி, மூன்றாவது குழந்தை ஆபேல் ஆகியோரை பீர்க்கன்காரணை பகுதியில் உள்ள சூசைமேரியின் அக்கா டார்த்தி வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். டார்த்தி சில மாதங்களுக்கு முன் இறந்த நிலையில், அவரது மகள் மேரி, குழந்தைகளை கவனித்து வந்துள்ளார்.

கடந்த 16 ம் தேதி அரக்க பரக்க 5 வயது சிறுவனான ஆபேலை தூக்கி கொண்டு மேரி குரோம்பேட்டை மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிறுவன் விளையாடி கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து விட்டதாக மருத்துவர்களிடம் தெரிவித்தார். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அபேல் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். சிறுவன் உடலில் தீக்காயங்கள், நகக் கீறல்கள் இருந்ததால் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சிறுவனின் அக்கா கீர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் மேரி அடிக்கடி சிறுவனை அடித்து சூடு வைப்பதாக பகீர் தகவலை கூறினார்.இதையடுத்து மேரியிடம் விசாரணையை முடுக்கினர் போலீசார். சம்பவத்தன்று சிறுவனை சரமாரியாக தாக்கி, தலையை பிடித்து சுவரில் மோதியதில் அவன் மயங்கி கீழே விழுந்தாகவும், சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து விடுவான் என நினைத்த மேரி அப்படியே விட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

நீண்ட நேரமாகியும் அசைவின்றி கிடந்ததால் அவன் இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து மேரி தனது நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இதனை விசாரணையில் அவர் ஒப்புக் கொண்ட நிலையில் போலீசார் மேரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதிக சேட்டை செய்ததால் தனது 5 வயது தம்பியை அக்காவே அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version