சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க வேண்டுகோள்- அமைச்சர் கருப்பணன்

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில் பிரசாரத்தின்போது பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அதிமுக கூட்டணியின் தொண்டர்களுக்கு அமைச்சர் கருப்பணன் வேண்டுகோள் விடுத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அத்தாணி பகுதிகளில் திருப்பூர் மக்களவை அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தனை ஆதரித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தங்களது ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது தவிட்டுப் பாளையத்தில், வேட்பாளரை வரவேற்று கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தனர். இதனைக் கண்ட அமைச்சர் கருப்பணன், மக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் விதமாக பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றும் பட்டாசுக்கு செலவு செய்யும் பணத்தில் வயதானவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அமைச்சரின் பேச்சுக்கு அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

Exit mobile version